நாகர்கோவில், அக். 5 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி தலைவர் மு. பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 1905ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் நாள் அன்று தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கைத்தறி தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளர்களின் வருவாயினை உயர்த்தவும், அவர்களின் பெருமையை பறைசாற்றவும், ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 7-ம் நாள் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து 07.08.2026 நாள் 12வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் பகுதியில் காலை 10.00 மணியளவில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சியினை திறந்து வைத்து கைத்தறி தினவிழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து, கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.
மேலும் மேற்படி தினத்தில் பள்ளியாடி பகுதியிலுள்ள ”இயேசுவின் திருஇருதய ஆடிட்டோரியத்தில்” வைத்து நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் பொது மருத்துவம், கண் பரிசோதனை, பல் மருத்துவம், எலும்புமூட்டு பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை மருத்துவம், தோல் மருத்துவம், நீரழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. இம்முகாமில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து நெசவாளர்களும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுள்ளார்.


