கிருஷ்ணகிரி, ஆக. 4 –
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஊத்தங்கரை மற்றும் கெலமங்கலம் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரியில், பொதுப்பணித்துறை சார்பாக, ரூ.22 கோடியே 75 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள் மற்றும் 5 புதிய ஆய்வகங்களை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, பர்கூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.6 கோடியே 25 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன் கட்டமைப்பு பணிமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.சி.கோவிந்தராசன் (பர்கூர்), பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி) ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பணிமனையை பார்வையிட்டார். உடன், பர்கூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் பி.கே.முருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



