மார்த்தாண்டம், ஆக. 3 –
களியக்காவிளை அருகே கேரளா பகுதி செங்கவிளை பகுதியை சேர்ந்தவர் சுதீசன் அதுல் (30). இவர் கேரள மாநில சிவசேனா பிரமுகர் ஆக உள்ளார். இந்த நிலையில் மார்த்தாண்டம் அருகே உள்ள குழித்துறை ஆற்றில் இவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ஆற்றில் கிடந்த அவரது உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடலில் காயங்கள் இருந்ததால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சுதீசன் அதுலுடன் 4 பேர் சுற்றி திரிவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு இடையே இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சிலரை தனிப்படை போலீஸ் பிடித்து விசாரித்து வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சதீசன் அதுல் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்கும் வரை சதீசன் அதுலின் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு சிவசேனா தலைவர் ரமேஷ் குமார் விடுத்துள்ள அறிக்கையில்:- கேரள மாநில சிவசேனா பிரமுகர் கொலையாளிகளை பிடிக்க தமிழக அரசும், குமரி மாவட்ட காவல்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்த பிறகு சதீசன் அதுலின் உடலை பெற்றுக் கொள்வோம். என கூறியுள்ளார்.



