நாகர்கோவில், ஜூலை 30 –
மணக்குடி அருகே பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வித பாதுகாப்பு ஊரணங்கள் இன்றி ஆபத்தான முறையில் கடலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகள் மற்றும் ஏரி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளும், மாணவர்களும் படகு சவாரி செய்வது வழக்கம். மணக்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ஒரு பள்ளி மாணவிகள் குழுவினர் தங்களது ஆசிரியர்களுடன் 2 படகுகளில் பயணம் செய்துள்ளனர். இந்த வீடியோவை உற்று நோக்கும்போது 2 படகில் பயணம் செய்த ஒரு மாணவி கூட லைப் ஜாக்கெட் எனப்படும் உயிர் காக்கும் கவசத்தை அணியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆசிரியர்களும் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கடல் அல்லது ஏரி பகுதிகளில் நிலவும் நீரோட்டம் மற்றும் திடீரென எழும் அலைகளால் படகு நிலை குலைந்து கவிழ்ந்தால் நீச்சல் தெரிந்தவர்களே தப்பிப்பது கடினம். ஒரு சிறிய அலை மோதினால் கூட படகு கவிழ்ந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ள சூழ்நிலையில், மாணவர்களில் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகமும் படகு இயக்குபவர்களும் காட்டியுள்ள இந்த அலட்சியம் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்படி பயணத்தின் போது ஒவ்வொருவரும் கண்டிப்பாக லைப் ஜாக்கட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விட அதிகமான நபர்களை ஏற்றுவது, படகின் ஓரங்களில் அமர்ந்து பயணம் செய்வது போன்றவை சட்டவிரோதமானது. மற்றும் உயிருக்கு ஆபத்தானவை ஆகும். ஆனால் இந்த படகில் அனைத்து விதிமீறல்களும் நடந்துள்ளது.
பள்ளி சுற்றுலா அல்லது கல்விசார் களப்பணிகள் என எதற்காக அழைத்து சென்றாலும் மாணவிகளின் மாணவர்களின் பாதுகாப்பிற்கு தான் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எனவே இந்த சட்ட விரோத மற்றும் ஆபத்தான படகு பயணத்திற்கு காரணமான படகு உரிமையாளர் மீதும், அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருங்காலங்களில் இது போன்று சுற்றுலாத்தலங்களில் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.



