ஈரோடு, ஜூலை 30 –
ஈரோடு சிதம்பரம் காலனி பகுதியைச் சேர்ந்த சி.எஸ்.சிவகுமார் (பெஸ்ட் சிவகுமார்) என்பவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வர்மன் என்பவரின் அதிகாரம் பெற்ற முகவராக (Power of Attorney) அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு மலேசிய தொழிலதிபர் வர்மன் ஈரோட்டிற்கு வந்தபோது, துரைசாமி என்பவரின் மகனும் தற்போது மொடக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினருமான (MLA) சண்முகன் மற்றும் அவரது மகன் பிரதீப் ஆகியோர் அவரை அணுகியுள்ளனர். “M/s. Yes and Yes Constructions” என்ற பெயரில் கட்டிட கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு தொழில் தொடங்குவதாகக் கூறி, ஈரோடு மேட்டூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தொழிலதிபர் வர்மன் முதற்கட்டமாக ரூ.2 கோடியை அவர்களிடம் வழங்கியுள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட சண்முகன் எந்தவொரு தொழிலும் தொடங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தவணை முறையில் ரூ.35 லட்சத்தை மட்டும் திருப்பி அளித்துள்ளார். மீதமுள்ள பாக்கித் தொகையான ரூ.1,65,00,000/- (ரூபாய் ஒரு கோடியே அறுபத்தைந்து லட்சம்)-ஐ செலுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான சண்முகனிடம், நிலுவைத் தொகையைத் தருமாறு தொழிலதிபர் வர்மன் சார்பில் பெஸ்ட் சிவகுமார் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அதற்கு சண்முகன், அதிகார மிரட்டல் தோணியில் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, ரூ.1.65 கோடி பணத்தை ஏமாற்றி மோசடி செய்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



