மார்த்தாண்டம், ஜூலை 27 –
குமரி மாவட்டத்தில் இயங்கும் பன்றி பண்ணைகளுக்கு துர்நாற்றம் வீசும் அழுகிய நிலையில் உள்ள கோழி கழிவுகள், உணவக கழிவுகள் வாகனங்களில் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. துர்நாற்றத்துடன் செல்லும் இந்த வாகனங்களை அவ்வப்போது பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தாலும் இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் பிணந்தோடு பகுதியில் செயல்பட்டு வரும் பன்றி பண்ணைக்கு உணவக கழிவுகள் கோழிக்கழிவுகள் என துர்நாற்றத்துடன் வந்த வாகனத்தை நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதி இளைஞர்கள் திற்பரப்பு பகுதியில் வைத்து துரத்தி பிடித்தனர். அப்போது வாகனத்தின் ஓட்டுனரும் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
தொடர்ந்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் குலசேகரம் போலீசாரும், திற்பரப்பு பேரூராட்சி அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வாகனத்தில் இருந்த கோழி கழிவுகளை அகற்றி கழிவுகளை ஏற்றி வந்த மினி டெம்போவை குலசேகரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசாரும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



