விளாத்திகுளம், ஆகஸ்ட் 28:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன் ஷஹீது வலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் சாதி, மத பேதமின்றி ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு விபூதி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்து கோவில்களில் வழங்கப்படுவது போன்று விபூதி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்படுவது இந்த தர்ஹாவின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. “எம்மதமும் சம்மதம்” என்ற ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
பல நூற்றாண்டுகள் பழமையான தர்ஹா
வைப்பார் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தர்ஹா மற்றும் பள்ளிவாசல் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. பண்டைய பாண்டியர் காலத்தில் ஹஜ்ரத் சம்சுதீன் ஷஹீது வலியுல்லா அன்ஹு, ஏர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீத்தின் படையில் தளபதியாக இருந்து பல போர்களில் பங்கேற்றதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வைப்பாறு படுகையோரம் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்த அவரின் நினைவாக இந்த தர்ஹா அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த தர்ஹாவிற்கு அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் மத வேறுபாடின்றி வந்து வழிபட்டு ஆசீர்வாதம் பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏர்வாடி தர்ஹாவிற்கு அடுத்தபடியாக தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தர்ஹாக்களில் ஒன்றாகக் கருதப்படும் வைப்பார் தர்ஹாவில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா, மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாக ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.



