கிருஷ்ணகிரி, ஜுலை 24 –
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலர்களுக்கான ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதன் குமார் அவர்கள் கலந்து கொண்டு, நாட்டு நலப்பணித் திட்டத்தின் தொடர் பணிகள் மற்றும் சிறப்பு முகாம்களை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும், பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் அதிக அளவில் சேர்வதை உறுதி செய்ய திட்ட அலுவலர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், உயர்கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, My Bharat தளத்தின் பயன்பாடு, பதிவு நடைமுறை, செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் பதிவேற்றம் தொடர்பாக சுகுணா கிருஷ்ணன் அவர்கள் திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட திட்ட அலுவலர் (APO), அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நா காளியப்பன் NSS DLO சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.



