நாகர்கோவில், ஜூலை 21 –
தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் டெம்போ டிரைவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் எனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்த் என்பவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். இதை கண்டு நான் சத்தம் போட்ட உடன் அவர் தப்பி ஓடினார். பின்னர் அவர் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு சம்பவத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் நான் யாரிடமும் கூறவில்லை.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நான் தனியாக வீட்டில் இருக்கும் போது ஒருநாள் எனது வீட்டுக்கு வந்த ஜெயகாந்தன் செல்போன் பதிவை காட்டி, நான் சொல்வது போல் கேட்க வேண்டும் என மிரட்டி, என்னுடன் கட்டாயமாக உடலுறவு கொண்டார். ஒரு கட்டத்தில் உடலுறவு வைத்ததையும் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அது மட்டுமின்றி என்னிடமிருந்து ரூ. 45 ஆயிரம் வரை பணம் வாங்கினார்.
பின்னர் ஜெயகாந்தன் வெளிநாடு சென்று விட்டார். அந்த சமயத்தில் அவரது நண்பர் ஜெகன் என்பவர் வந்து மேற்கண்ட சம்பவத்தை கூறி பலமுறை என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். நான் எனது கணவரிடம் தெரிவித்த போது, அவர்கள் எனது கணவரை மிரட்டி உள்ளனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்ல், மறைத்து வீடியோ எடுத்தால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஜெயகாந்தன், ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். விசாரணைக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


