கிருஷ்ணகிரி, ஜூலை 14 –
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.07.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி, பட்டதாரிகள், பொறியியல், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் என அனைத்து கல்வித் தகுதியினரும் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலைளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமும் மேற்காணும் கல்வித்தகுதியும் உடைய அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு இம்முகாமின் மூலம் தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் இரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 04343-291983 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் .ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



