திருப்பூர், ஜூலை 14 –
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் அவர்களிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், நல்லூர் நுகர்வோர் மன்ற தலைவர் நல்லூர் சண்முக சுந்தரம், வேல்முருகன் உள்ளிட்டோர் நேரிடையாக மனு அளித்தனர்.
இதில் இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது…? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசு உறுதிப்படுத்துவது கடமையாகும்.
அரசுச் சேவைகளை காலத்தோடு வழங்கவும், நிர்வாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் “சேவை பெறும் உரிமைச் சட்டத்தை” உடனடியாக முழுமையாக அமல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டும்.
சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வரும் சூழலில், மக்களிடம் கோரிக்கை மனுவை பெறும் அரசு அலுவலர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு ஒப்புதல் தருவார். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை நிறைவேற்றப்படாவிட்டால், 2 மேல் கட்ட முறையீடுகளுக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு சேவையை நிறைவேற்றத் தவறிய அலுவலர்களுக்கு அபராதக் கட்டணம், அதிகபட்சமாக ரூபாய் 5000 வரை விதிக்கப்படுகிறது.
சாதிச் சான்றிதழ், பட்டா மாறுதல், வாரிசுச் சான்றிதழ், பிறப்பு/இறப்புச் சான்றிதழ் போன்ற ஒவ்வொரு அரசுச் சேவைக்கும் இத்தனை நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற காலக்கெடு கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்கள் தங்களின் விண்ணப்பங்கள் எந்த அதிகாரியின் வசம், என்ன நிலையில் உள்ளன என்பதைத் தங்குதடையின்றி இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி வழியாகக் கண்காணிக்கும் வெளிப்படையான வசதி முழுமையாகச் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி, நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இச்சட்டத்தை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டும்.
எனவே இது அரசு நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையை பல மடங்கு உயர்த்தும் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தமிழக மக்களின் அச்சத்தைப் போக்கி, ஒரு சிறப்பான லஞ்சமற்ற, காலதாமதமற்ற மக்கள் நல நிர்வாகத்தை வழங்க ஆவன செய்ய சேவை பெறும் உரிமைச் சட்டத்தை” உடனடியாக முழுமையாக அமல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.



