சென்னை, ஜூலை 13 –
சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட ‘வெரிசெல்லா என்செபாலிடிஸ்’ எனப்படும் உயிருக்கு ஆபத்தான மூளை நோயால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 53 வயது பெண்ணுக்கு டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.
மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெரட் லிவிங்ஸ்டன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்த பின் சின்னம்மை வைரஸ் அவரது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி, மூளையில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால், மூளை பாதிப்பு அதிகமாகி, ரத்தக்கசிவு மற்றும் மூளையில் ஆபத்தான அளவில் நீர் கோர்த்து உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. ரத்தக்கசிவு அதிகமாகி, மூளையில் அதிகப்படியான நீர் சேர்ந்ததால் மூளையின் அழுத்தம் அபாயகரமான அளவிற்கு உயர்ந்தது. இதனால் அவரது சுயநினைவும் குறையத் தொடங்கியது.
அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினர் அவருக்கு மூளையில் சிறு துளையிட்டு குழாய் மூலம் தேங்கியிருந்த அதிகப்படியான நீரை வெளியேற்றி அழுத்தத்தைக் குறைத்தனர்.
ரத்தக்கட்டியைக் கரைத்து, மேலும் நரம்பு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஹெப்பரின் என்னும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டது. இந்த அவசர சிகிச்சைகளுக்குப் பிறகு, நோயாளியின் உடல்நிலை படிப்படியாக முன்னேறியது.
வென்டிலேட்டர் உதவி இல்லாமல் அவரால் இயற்கையாகவே சுவாசிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 40 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார்.
இதுகுறித்து இம்மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் ஜெரட் லிவிங்ஸ்டன் கூறுகையில், “பொதுவாக சின்னம்மை ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலாக கருதப்பட்டாலும், சில நேரங்களில், குறிப்பாக பெரியவர்களுக்கு இது கடுமையான நரம்பியல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நோயாளியின் நிலை சின்னம்மையால் ஏற்பட்ட மிக அபூர்வமான மற்றும் வேகமாகப் பரவக்கூடிய மூளை பாதிப்பாகும். சரியான நேரத்தில் நோயைக் கண்டறிதல், தொடர்ந்து கண்காணித்தல், நவீன ஸ்கேன் வசதிகள் மற்றும் மருத்துவர்களின் கூட்டு முயற்சியே இந்த ஆபத்தான நிலையிலிருந்து நோயாளியைக் காப்பாற்ற உதவியது.” என்றார்.



