கோவை, ஜூலை 13 –
மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக,40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவை கங்கா மருத்துவமனை மேற்கொண்டு வரும் ‘ப்ராஜெக்ட் சக்தி’ என்னும் மருத்துவ பரிசோதனை திட்டத்தின் 150-வது இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி வளாகத்தில் நடைபெற்றது.
முகாமில் 100 கும் மேற்பட்ட பெண்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல்,மார்பக சுய-பரிசோதனை செய்துகொள்ளுதல் மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்பு முகாம், கங்கா மருத்துவமனையின் நவீன மேமோகிராபி வசதிகள் கொண்ட நடமாடும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை வாகனம் மூலம் நடத்தப்பட்டது. ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த மா சந்திர ஹாசா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர்.ராஜா சண்முக கிருஷ்ணன்,உயிர்களைக் காப்பாற்றுவதில் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறுகையில், “பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவானது. பெண்களைத் தாக்கும் அனைத்துப் புற்றுநோய்களிலும் இது சுமார் நான்கில் ஒரு பங்காக உள்ளது. இதை எப்போதும் தடுத்துவிட முடியாது என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம். ஆரம்பக் கட்டத்திலேயே மார்பகப் புற்றுநோயைக் கண்டறிந்தால்,அவர்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 99 சதவீதமாக உள்ளது.எனவே வழக்கமான பரிசோதனைகள் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமாகும்.
“அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல்நவீன பரிசோதனை வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் மற்றும் பெண்களுக்கு உரிய நேரத்தில் நோய் கண்டறிதல்,
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வழிகாட்டுதல், சரியான சிகிச்சை மற்றும் நோயறிதலுக்குப் பிறகான தொடர்ச்சியான ஆதரவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது” என்றும் கூறினார்.
இதுவரை 10,122 பெண்களுக்கு மார்பகப் பரிசோதனை செய்யப்பட்டதில் புற்றுநோய் கண்டறியப்பட்ட 81 பெண்களுக்கு கங்கா மருத்துவமனை மூலம் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனைக்கு வரத் தயங்கும் பெண்களுக்காக,’நடமாடும் மேமோகிராபி வாகனம்’ மூலம் அவர்கள் வசிப்பிடங்களுக்கே சென்று சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மார்பக சுய-பரிசோதனை மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும் ஏழைப் பெண்களுக்கு கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.



