நாகர்கோவில், ஜூலை 11 –
தக்கலை அருகே பரம்பை ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் வேணு (31). இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வேணு இன்று நாகர்கோவிலில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறி இருப்பதாவது: நான் எனது மனைவியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு தற்போது நான்கரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். சில மாதங்களுக்கு முன்பு எனது முயற்சியால் எனது மனைவிக்கு கற்பகோடு அங்கன்வாடியில் ஆசிரியராக வேலை கிடைத்தது.
வேலைக்குச் சேர்ந்த இரண்டு மாதங்களிலேயே, திங்கள்சந்தை டூ அழகியமண்டபம் தடத்தில் ஒரு மினி பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் பெங்கரையைச் சேர்ந்த வில்வின் என்ற இளைஞருடன் எனது மனைவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
மேலும் அந்த அங்கன்வாடி மையத்தில் வைத்து கள்ள காதலனுடன் இளம்பெண் பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது அங்கு கற்பிக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது. ஆனால் அதை கூட பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு முன்பு முகச்சுளிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து எனது மனைவியிடம் தட்டிக்கேட்டபோது, தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு, எனது நான்கரை வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு மனைவி கள்ளக்காதலனுடன் தப்பியோடியுள்ளார். பின்னர் நாகர்கோவிலில் வைத்து நேரில் சந்தித்த அவளது கள்ளக்காதலன் வில்வின், என்னையும் எனது குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும், எனது மனைவியை திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறி மிரட்டி வருகிறார்.
இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட்டு, தனக்கும் தனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், திருடப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும் எனவும் வேணு தனது புகாரில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.


