ஓசூர், ஜூலை 10 –
கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் கெலவரப்பள்ளி அணை இடதுபுற பாசனக் கால்வாய் சீரமைப்புப் பணிகளை வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் P.S சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் ஆளூர் பகுதி முதல் சூளகிரி வரை உள்ள கால்வாய் பகுதிகளை முழுமையாகப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு இக்காலவாயின் சேதமடைந்த நிலை குறித்து முன்னாள் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, ₹8.5 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சீரமைப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.” விவசாயிகள் தங்கள் பாசனத் தேவைகளுக்காகக் கால்வாயில் விரைவில் தண்ணீர் திறந்து விடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்று, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கும் இருசக்கர வாகனத்திலேயே நேரில் சென்று அவர் ஆய்வு செய்தார்.
மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நடப்பு ஜூலை மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்காகப் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது உள்ளூர் விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்



