நாகர்கோவில், ஜூலை 9 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அழகியமண்டபம் நான்கு வழிசாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதோடு, சாலைகளும் பழுதடைந்து உள்ளது.
இச்சாலையினை மேம்படுத்திட விடுத்த கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.85 கோடி மதிப்பில் அழகியமண்டபம் சந்திப்பில் புதிதாக ரவுண்டண அமைத்து, அச்சாலையினை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: கருங்கல் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செருவல்லூர் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிறாகல் சானல்முகவூர் சாலை பலப்படுத்தும் பணி முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.51.50 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



