குளச்சல், ஜூலை 3 –
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஐ ஆர் இ எல் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புகளின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஹெலன் நகரில் செயல்பட்டு வரும் சாந்திதான் பெண்கள் இயக்கம் மகளிர் மேம்பாட்டுக்காக ஐ ஆர் இ எல் நிறுவனம் ரூ. 16.25 லட்சம் செலவில் தையல் பயிற்சி கட்டிடம் அமைத்து, 10 மின் தையல் இயந்திரங்களை வழங்கியது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தையல் பயிற்சி கட்டிடத்தை ஹெலன் நகர் பங்கு பணியாளர் ஜான் போஸ்கோ திறந்து வைத்தார். ஐ ஆர் இ எல் முதன்மை பொது மேலாளர் மற்றும் தலைவர் செல்வராஜன் மின் தையல் இயந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் மோனசைட் என் 9 கனிமம் இயற்கையாகவே உள்ளதால் கதிர்வீச்சு அதிகம் உள்ளது. இந்த தாதுமண்ணை ஐ ஆர் இ எல் நிறுவனம் எடுப்பதால் 8 முதல் 10 மடங்கு வரை கதிர்வீச்சு குறைகிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. நிலையான அபிவிருத்தி மற்றும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்த முறையில் கனிமங்கள் அடங்கிய தாது மண் எடுக்கப்பட்டு, பிரித்தெடுக்கப்படுகிறது. அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் நில உரிமையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மண்ணை எடுத்துவிட்டு, அங்கு கனிமங்கள் நீக்கிய மண்ணை குத்தகை தொகையுடன் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே 11 மாதங்களுக்குள் நிலம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஹெலன் நகர் பங்கு பேரவை துணைத் தலைவர் அந்தோணி தாசன், பொருளாளர் ஜெனிதா, செயலாளர் விஜயன் மற்றும் பொறுப்பாளர்கள், ஐ ஆர் ஏ நிறுவன பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



