மார்த்தாண்டம், ஜூலை 3 –
குமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, அந்தியோதயா அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 59 ஆயிரத்து 441 பயனாளிகளின் குடும்ப அட்டைகளை 100% தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என பணியாளர்களை நியமித்து கலெக்டர் பிரதாப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேற்படி தணிக்கை பணிக்காக நேற்று இடைக்கோடு கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவி பணியாளராக பணியாற்றி வரும் ரெஜி சேகர் (44) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் வீடு வீடாக சென்று குடும்ப அட்டை பயனாளர்களை சந்தித்து தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அரத்தங்கோடு என்ற பகுதியில் வசிக்கும் சதி குமாரி என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றபோது அவரை வெளியே நின்று அழைத்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜான் பால் (45) என்பவர் எனது உறவினரை ஏன் பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் என கேட்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.
அப்போது 2 பேரும் அங்கு இருந்து வேறு வீடுகளுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வழிமறித்து ஜான்பால் 2 பேரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் ரெஜி சேகரை பைக்கால் மோதி ஓடையில் தள்ளி, தாக்கியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாரை தகாத வார்த்தையில் திட்டிவிட்டு, தப்பி ஓடி உள்ளார்.
இதில் காயமடைந்த ரெஜி சேகர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் ஜான் பால் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


