திருச்சி, ஜூலை 3 –
திருச்சி பொன்மலை மஞ்சள்திடல் ரயில் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அம்பிகாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி என்பவர் தனது ஆட்டோ அருகிலேயே உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்மலை போலீசார், உயிரிழந்தவர் ராமச்சந்திரன் எனும் ரவி என்பதும், அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
மேலும், குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தாரை விட்டு தனியாக வசித்து வந்த அவர், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரயில் பயணத்தின் போது தடுமாறி விழுந்ததில் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இருந்த போதும் கட்டைக்கால் பொருத்திக் கொண்டு சொந்தமாக ஆட்டோ ஒட்டி வந்த ரவி, கிடைக்கும் நேரங்களில், கிடைத்த வருவாயில் மது அருந்தி ஆட்டோவிலும் சாலை ஓரத்தில் கிடைக்கும் இடத்திலும் படுத்து உறங்கி தனது வாழ்க்கையை ஒட்டி வந்துள்ளார். மேலும் அவரது கால்கள் இழந்த வழக்கில் சொற்ப தொகை நீதிமன்றம் மூலம் கிடைக்கப்பெற்று இருக்கிறது. அதை தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து பணம் பார்த்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மது அருந்திய ரவி மஞ்சள் திடல் ரயில் நிலையம் பின்புறம் தனது ஆட்டோ அருகிலேயே இறந்த நிலையில் இன்று காலை கண்டறியப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொன்மலை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



