கன்னியாகுமரி, மே 25 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புதுவை முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் இப்போதுதான் புதிய ஆட்சி வந்திருக்கு, இரண்டு வாரம் என்பது குறுகிய காலம் கிடையாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். கோயம்புத்தூரில் 11 வயது சிறுமிக்கு நடந்த விவகாரம் மிகவும் வருத்தத்தக்க ஒன்று. தீர்ப்புகள் மாறினாலும், தமிழகத்தில் பெண்களுக்கான நிலைமை மாறாமல் இருப்பது கவலை அளிக்கிறது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தீவிரமாக அலசி ஆராய்ந்து, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘நாங்கள் இப்பதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம், கால அவகாசம் வேண்டும்’ என்று சொல்ல முடியாது. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட, விழுப்புரத்திற்கு அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு குழந்தையும் காவு கொடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்கென 5 ஆயிரத்து 300 காவல்துறை அதிகாரிகளும், குழந்தைகள் பாதுகாப்புக்கு மட்டுமே ஆயிரத்து 635 அதிகாரிகளும் உள்ளனர். 224 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. ‘சிங்கப்பெண் படை’ உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த அமைப்புகள் எல்லாம் எந்த அளவுக்குத் தீவிரமாகச் செயல்படுகின்றன என்பது தெரியவில்லை. இது வெறும் கூடுதல் அதிகார அமைப்பாக மட்டுமே நீடிக்கக் கூடாது.
இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் கிடைக்கும். 2029 மற்றும் 2031 ஆகிய ஆண்டுகள் நிச்சயமாக பாஜகவிற்கான காலமாக இருக்கும். முன்னாள் ஆளுநர் மற்றும் மாநிலத் தலைவர் என்ற முறையில் எனக்குச் சட்டமன்ற பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தது. அதனால் நான் சென்றிருந்தேன். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் அங்கு வந்திருந்த அனைத்துத் தலைவர்களையும் பார்த்தார். எங்களை மட்டும் நேரில் பார்க்கவில்லை என்பது அவரது விருப்பம். ஆனால், எல்லோரையும் பார்த்தவர், அனைத்து அலுவலகங்களுக்கும் சென்றவர், பாஜக அலுவலகத்திற்கும் வந்திருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் பாரபட்சம் பார்க்கக் கூடாது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள அனுபவம் இல்லாத புதியவர், தமிழ்நாட்டின் பிரச்சனைகளை விரைவாக முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்துக் கட்சித் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனுபவம் இல்லாதவர்கள், அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை என்பது எனது கருத்து.
திமுக – பாஜக கூட்டணி என்பது வெறும் யூகங்கள் மட்டுமே. பாஜகவைப் பொறுத்தவரை தெளிவான அரசியல் நடை போட இருக்கிறது. எங்களை யாரும் காங்கிரஸ் போல முதுகுக்குப் பின்னால் குத்த முடியாது. காங்கிரஸ் கட்சியினர் அழைப்பதற்கு முன்னரே போய் ஒட்டிக்கொள்பவர்கள், ஆனால் பாஜக அப்படி அல்ல.
இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு சுனாமி போல அடித்துச் சென்றுள்ளது. இதில் முதலமைச்சரே தோற்றுப் போகும்போது, இந்தத் தேர்தலை ஒரு கணக்காகவே நாம் எடுத்துக்கொள்ள முடியாது. நிச்சயமாக வருங்காலத்தில் கூட்டம் கூட்டமாகத் தமிழகத்தில் தாமரை மலரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதில் பாஜக மாவட்ட தலைவர் கோபகுமார், செயலாளர் சுபாஷ், கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு செயலாளர் குமரி சிவா மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.



