நாகர்கோவில், ஜூன் 2 –
நாகர்கோவில் மாநகர மக்களின் நீண்டகால தேவைகளில் ஒன்றான வடசேரி நவீன ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் இன்று துவங்கியது. சுமார் 69 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அதிநவீன வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணிகளுக்கான பணி ஆணையும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது.
வடசேரி சந்தையின் மேற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் இதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் நேற்று காலை துவங்கிய நிலையில், அங்குள்ள மார்க்கெட் பகுதிக்கு பொதுமக்கள் வருவதற்கான பொதுப் பாதையை இடிக்காமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அங்குள்ள வியாபாரிகள் பேருந்து நிலைய பணிக்கு அனுமதித்தனர்.
ஆனால் வியாபாரிகளின் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை இடித்து பணிகள் துவங்கியதால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் ஜேசிபி இயந்திரத்தையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.



