புதுக்கடை, ஜூலை 2 –
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் ரெதீஷ் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெல்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த 28-ம் தேதி இவர் வேலை முடித்து தனது பைக்கில் கருங்கல் – புதுக்கடை சாலையில் வந்து கொண்டிருந்தார். கைசூண்டி என்ற பகுதியில் வரும்போது இவர் ஓட்டிக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரெதீஸ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தாயார் ராஜம் என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



