திருப்பத்தூர், ஜூன் 29 –
திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சௌளூர் கிராமத்தில் முடிவு பெறாத தரைப்பாலத்தினை விரைவில் பணியினை முடிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் விரைவாக தரைப்பாலத்தின் பணியினை முடிக்க கோரி பல முறை ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தும் பணியினை மேற்கொள்ளமால் அலட்சியம் செய்து வருவதாக கூறுகின்றனர். மேலும் 2022 – 2023 MGNREGS திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி துவங்கப்பட்டது. ஆனால் இது வரை முடிக்காமல் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியினை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறுகின்றனர்.
தரைப் பாலத்தின் பணி 90% முடிந்ததாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்விற்கு சென்ற நிலையில் தெரிவித்துள்ளார் ஆனால் அதே சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தகவலை மனுதாரர் கேட்டபோது தரைப் பாலத்தின் பணி முழுமையாக முடிவு பெற்றுள்ளது என திடுக்கிடும் தகவலை தெரிவிக்கின்றனர். முடிவுறாத பணிக்கு எப்படி காசோலை அல்லது கணக்குகளை முடித்தார்கள் என்பது மனுதாரரின் கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தரைப் பாலத்தின் பணியினை முடிக்க வேண்டும். இதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தினை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.



