தஞ்சாவூர், ஜூன் 26 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட 1.65 லட்சம் குழந்தைகளுக்கு வருகின்ற 28ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என கலெக்டர் ரேவதி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி அளித்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தீவிர போலியோ ஒழிப்பு திட்டத்தின் கீழ் போலியோ சொட்டு மருந்து முகாம் 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. தமிழக அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக 2004 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் எந்த குழந்தையும் போலியோ நோயால் பாதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு வருகிற 28ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1 லட்சத்து 64 ஆயிரத்து 908 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக நகர்ப்புறங்களில் 126 மையங்களும், ஊரக பகுதிகளில் 1,483 மையங்களும் என மொத்தம் 1,609 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் 6,436 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 217 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் கோவில்கள், சுங்க சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படும். தொலைதூர பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் குடும்பங்களின் குழந்தைகளுக்கு 77 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
ஜூன் 28ஆம் தேதி அன்று பிறந்த குழந்தைகள் உட்பட இதற்கு முன்பு எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் இந்த முகாமின் கூடுதலாக ஒரு தவணை போலியோ சொட்டு மருந்து கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



