களியக்காவிளை, ஜூன் 15 –
களியக்காவிளை அருகே வன்னியூர் ஊராட்சிக்குட்பட்ட மேக்கோடு – குறவன்விளை சாலை உள்ளது. சாலை முடியும் இடத்தில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஆதிதிராவிடர் குடியிருப்பு காலனி உள்ளது. இந்த சாலை நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோரமாக அமைந்துள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு முன்பு செப்பனிடப்பட்டது. அதன் பிறகு இதுநாள் வரை எந்த பராமரிப்பும் இல்லாமல் பழுதடைந்தது. குறிப்பாக கால்வாயின் பக்க சுவர் ஆங்காங்கே இடிந்து மண் சரிவு ஏற்பட்டு அடிக்கடி வாகனங்கள் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
சுமார் நூறு அடிக்கும் மேல் ஆழமான கால்வாய் கரையோரம் உள்ள இந்த சாலை நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. இவ்வழியாக இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்லவேண்டிய நிலை தொடர்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் , பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கும் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே பெரும் உயிர் பாதிப்புகள் ஏற்படும் முன்னே இந்த பகுதியில் கால்வாய் பக்க சுவர்களை சீரமைந்து சாலையை செப்பனிட்டு தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



