நாகர்கோவில், ஜூன் 15 –
அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட மாறாமலை பகுதியில் யானை தாக்கி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவி என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், பத்மநாபபரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட வன அலுவலர் அன்பு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவித்தொகை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: அழகிய பாண்டியபுரம் வனச்சரகத்திற்குட்பட்ட கீரிப்பாறை அருகில் உள்ள மாறாமலை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரவி (47) என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் எஸ்டேட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை வந்து அவரை தாக்கியதில் வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனே அவரை பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது மேற்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.59,100 அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற யானை தாக்குதல் நடைபெற்று வருகிறது. வனத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட வனத்துறையினர் யானையின் வழித்தடங்களை அறிந்து அந்த பகுதிகளில் மின் வேலிகள் ஏற்கனவே அமைத்துள்ளார்கள். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் அரசு சட்ட திட்டங்களுக்குட்பட்டு மற்ற பகுதிகளில் மின் வேலிகள் அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.கிங்சிலின், உறைவிட மருத்துவர் மரு.விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் மரு.கலைக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



