தருமபுரி, ஜூன் 13 –
தருமபுரியில் ஜூன் 14 உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு மை தருமபுரி அமைப்பின் சார்பாக அதியமான் கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத்தில் மாணவர்களிடையே ரத்ததான பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களை இரத்தத் துளி வடிவில் அமர வைத்து சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டு, மனிதநேயத்தின் ஒரு துளி இரத்ததானம் தாருங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள் என்ற நோக்கம் அடையாளமாக திகழ்ந்தது. அடுத்து வரும் சமுதாயத்திற்கு இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. பள்ளியில் மாருதி இரத்த வங்கி சார்பாக இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனர் செந்தில் சி. கந்தசாமி, செயலாளர் தனசேகர், நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் செந்தில் முருகன், தங்கம் மருத்துவமனை மருத்துவர் வானதி செந்தில், குழந்தைகள் நல மருத்துவர் தீபக், மாருதி இரத்த வங்கி வெங்கடாசலம், விஜய் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் விஜய் வித்யா, ஷோபா, பரமேஸ்வரன், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் சண்முகம், கணேஷ், விஜயகாந்த், ராஜ்குமார், ரோடா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.



