நாகர்கோவில், ஜூன் 11 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக களியக்காவிளை, தக்கலை பகுதிகளில் சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களியக்காவிளை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்திய போது ஒற்றாமரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (72) என்பவர் வீட்டிலிருந்து 8.3 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஷாகுல் ஹமீது மீது களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்துனர்.
இது போன்று தக்கலை மேக்காமண்டபம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பாலகிருஷ்ணன் (58) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 15.5 கிலோ போதை புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட முழுவதும் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இரவு பகலாக போலீசார் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரித்து உள்ளது.


