கன்னியாகுமரி, ஜூன் 10 –
கன்னியாகுமரியை அடுத்த தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை மனைவி செல்வராணி (41). இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். கணவர் தங்கதுரை டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சந்தானம் (27).
இந்த நிலையில் சம்பவ தினம் இரவு தங்கதுரையின் வீட்டு காம்பவுண்டுக்குள் சந்தானம் நடமாடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த செல்வராணி சத்தம் போட்டவுடன் அவர் அங்கிருந்து ஓடி விட்டாராம். இது குறித்து அடுத்த நாள் காலை சந்தானத்திடம் செல்வராணி தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தகாத வார்த்தைகள் பேசி செல்வராணியின் சேலையை பிடித்து இழுத்து, பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து செல்வராணி அளித்த புகாரின் பேரில் தென்தாமரை குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.


