சென்னை, பிப். 20 –
தூக்கக் கோளாறுகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியாவின் முதல் ‘ஒருங்கிணைந்த தூக்கவியல் மையத்தை’ சென்னை சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது. தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற நோயாளிகள் பல்வேறு இடங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், 10 மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் நரம்பியல், உளவியல் மற்றும் சுவாசம் சார்ந்த தூக்கக் கோளாறுகளுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த மையத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இவர் சமீபத்தில் ” டியர் “என்ற தமிழ் திரைப் படத்தில், குறட்டையால் புதுமண தம்பதியினரிடையே ஏற்படும் சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மையப்படுத்திய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இத்திறப்பு விழா நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் பங்கேற்றார்.
உறங்கும் நேரத்தில் மாரடைப்பு, இதயச் செயலிழப்பு பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை விளைவிக்கக்கூடிய தூக்கத்துடன் தொடர்புடைய கோளாறுகளுக்கு இந்த தூக்கவியல் சிகிச்சை மையம் சிறப்பு சிகிச்சையை வழங்குகிறது. காது-மூக்கு-தொண்டை நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் அடங்கிய ஒரு கூட்டு மருத்துவக் குழு உலகளவில் சிறந்த தரநிலைகளுடன் அதிநவீன சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கிறது. மிகத் துல்லியமான, வலியற்ற மற்றும் இரத்தம் வராத எண்டோஸ்கோபி, பிளாஸ்மா அடிப்படையிலான மற்றும் கதிர்வீச்சு அதிர்வெண் சிகிச்சை வழிமுறைகளும் இதில் உள்ளடங்கும்.



