கன்னியாகுமரி, ஜூன் 10 –
பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் 132 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி கடற்கரை பகுதி, சன்னதி தெரு, படகு துறை, ரத வீதிகள், மெயின் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவற்றை கண்காணிப்பதற்காக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் நவீன கண்காணிப்பு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு அமைப்பை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்: கன்னியாகுமாரியில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை சார்பில் 132 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. கூட்டத்தில் இருக்கும் முன்னாள் குற்றவாளிகளை அவர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு துல்லியமாக கண்டுபிடித்து எச்சரிக்கும் திறன் கொண்டது.
மேலும் கன்னியாகுமரியில் 10 ஏஐ கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை இயக்கத்தில் வரும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர் காவல் திட்டத்தில் ஒரு ஆண்டில் 2800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் “ஆப்ரேஷன் ஷீல்ட்” என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 46 கடைகள் மூடப்பட்டு 1 கிலோ கஞ்சா 1000 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி சீசன் நேரத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் வருகின்றனர். அவர்களுக்கு அடையாள அட்டை அவசியம். அடையாள அட்டை இல்லாத தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் சூப்பிரண்டு கலையரசன், பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், மதுவிலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு ராஜா, கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சுந்தர ராஜபெருமாள், கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளர் பட்டுச்சாமி, நகரமைப்பு ஆய்வாளர் சேக் அப்துல்காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



