நாகர்கோவில், ஜூன் 5 –
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக பார்வைக்கு வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகளிலும் கல்வி கட்டணத்தை தவிர இதர கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என ஏற்கனவே தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பள்ளிகளில் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கல்வி கட்டணத்தினை பொது மக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரம் செய்தும், சார்ந்த பள்ளிகளின் இணைய தளத்தில் வெளியிடவும் மற்றும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்பு வாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்குவதை அனைத்து நர்சரி பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் தங்களுடைய கல்வி கட்டணத்தை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 4(1) (b) பிரிவின்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்காணும் விவரங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை அனைத்து கல்வித்துறை அலுவலர்களால் பார்வையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளிக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்தாத தனியார் பள்ளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



