சுசீந்திரம், ஜூன் 4 –
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளியில் இந்த கல்வியாண்டில் முதல், இரண்டாம் இடங்களைப் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசுகள் வழங்கி பேசியதாவது: மாணவச் செல்வங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை நிதானமாக, கவனமாக, அர்ப்பணிப்போடு ஆசிரியர்கள் கையாள வேண்டாம். ஆங்காங்கே பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை போக்சோ சட்டம் போட்டு தண்டிப்பது, தேவையான ஒன்றாக உள்ளது.
அதனால் முதல்வர் விஜய் மாணவச் செல்வங்களை ஒழுக்க பாதைக்கும், வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல வாரம் தோறும் பள்ளிகளில் நற்போதனை வகுப்புகளை கற்றறிந்த சான்றோர்களை வைத்து நடத்த வேண்டும். இன்றைக்கு போதை பழக்கம், ஈவ்டீசிங், சினிமா, கிரிக்கெட் மோகம், பைக் ரேஸ் ஆகியவற்றில் இருந்து மாணவர்களை மீட்டு, சமூகத்திற்கு ஆரோக்யமான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
கல்விச்சாலை என்பது யாகசாலை. கல்விக் கூடம் என்பது ரோஜா வனம் போன்றது. மாணவச் செல்வங்களை மணம் வீசும் மலர்களாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது. மாணவர்கள் நெஞ்சம் நெருப்பு போன்றது. அந்த நெருப்பை தவறுக்கு அல்லாமல் சமூக வளச்சிக்காக பயன்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் மாற்றத்தை விரும்புபவர். எனவே, மாணவ சமுதாயத்தின் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்தி பள்ளிகள் தோறும் நற்போதனை வகுப்புகளை நடத்த ஆணையிடுமாறு வேண்டுகிறேன் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வலியுறுத்தி பேசினார். மேலும் இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விழாவில் சென்னை ஜெயிண்ட் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் இயக்குனர் ஜாண்சன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



