தஞ்சாவூர், ஜூன் 2 –
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை தவறு இன்றி துல்லியமாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் ரேவதி கூறினார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு 3 நாள் பயிற்சி வகுப்பினை கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறை கணக்கெடுப்பு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தாங்களாகவே இணையதளம் மூலமாக தங்களது விவரங்களை தெரிவிக்கும் சுய கணக்கெடுப்பு அடுத்த மாதம் ஜூலை 17ம் தேதி முதல் தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கணக்கெடுப்பாளர் மூலம் வீடுகள் தோறும் மேற்கொள்ளப்படும் வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஊரக மற்றும் நகர்புற பகுதியில் பொறுப்பு அலுவலர்களாக 10 தாசில்தார்கள், 2 மாநகராட்சி ஆணையர்கள், 3 நகராட்சி ஆணையர்கள் 19 பேரூராட்சி செயல் அலுவலர்கள் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் செயல்பட உள்ளார்கள்.
இந்த பயிற்சி சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரக அலுவலர்களால் நடத்தப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் முழுமையாக பங்கு பெற்று வீடுகளில் சரியான முறையில் எவ்வித தவறுகளும் இன்றி துல்லியமாக கணக்கீடுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தவச்செல்வன், முதன்மை கல்வி அலுவலர் பேபி, தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



