தஞ்சாவூர், ஜூன் 1 –
அரசியலின் அடிப்படை நாகரீகத்தை கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி என தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இதற்கு
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார். உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், வைத்தியலிங்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் டி கே ஜி நீலமேகம், ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகர செயலாளர் சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்றார்
கூட்டத்தில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக மீதும், தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் நம்பிக்கை வைத்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கும் இணைந்து பணியாற்றிய வாக்களித்த கூட்டணி கட்சியினர் கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
வருகின்ற 3ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாளையொட்டி கருப்பு சிவப்பு கொடியேற்றி, ஆதரவற்ற முதியோர், மாணவ, மாணவிகள் விடுதிகளில் அறுசுவை உணவு வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவினரின் உழைப் பினால் காங்கிரஸ் கட்சி 5 சட்டசபை உறுப்பினர்களை வென்றன. தேசிய கட்சியாக இருந்து கொண்டு, தேர்தலுக்கு முன்பாகவே மாநில கட்சியான திமுக வாக்குகளால் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் பெற்றனர். இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல் நன்றி உணர்ச்சியும் இல்லாமல் அரசியலில் அடிப்படை நாகரீகத்தை கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணிமாறி சென்றனர். சொந்த உழைப்பில் ஒரு நாளும் வெற்றி பெற முடியாத நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் இழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சியை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆட்சிப் பொறுப்பேற்று 21 நாட்களில் தமிழ்நாடு எங்கும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ரீல்ஸ் ஆட்சியை நிறுத்தி விட்டு, ரியல் ஆட்சியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் மணிமாறன், கனகவள்ளி, புண்ணியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எல்ஜி அண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



