களியக்காவிளை, மே 27 –
களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14வது வார்டு கவுன்சிலராக (பாஜக) உள்ளார். இவர் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருவதுடன் பாறை உடைக்கும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், கிணறு தோண்டும் பணியும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர். தொடர்ந்து குணசீலனின் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 27 டெட்டனேட்டர்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் உள்ளிட்ட வெடிபொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குணசீலன் மற்றும் அவருக்கு வெடிபொருள்களை விற்பனை செய்த பனச்சமூடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (75) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


