மார்த்தாண்டம், ஆக. 13 –
திற்பரப்பு அருகே குருவி காலை பகுதியில் பல தலைமுறைகளுக்கு முன்பு உள்ள ஒரு சிறிய கோயில் பல ஆண்டுகளாக ஊர் மக்களால் பராமரிக்கப்பட்டு ஊர் மக்கள் சார்பில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த கோவிலின் அருகே மிக உயரமான இரண்டு மரங்கள் உள்ளன. இந்த நிலையில் தனி நபரான அந்த பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இந்த கோவில் நிலத்தை தனது நிலம் என உரிமை கொண்டாடியதாக தெரிகிறது. இவர் போலியாக உரிமை கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கமிட்டி சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென தனிநபருக்கு ஆதரவாக அங்கு நிற்கும் பெரிய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊதுமரம் என்ற பச்சை மரத்தை வெட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் உள்ள பெரிய பச்சை மரத்தை வெட்ட தனி நபருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வந்தனர்.
பச்சை மரத்தை வெட்ட அனுமதி இல்லை என்கின்ற நிலை இருக்கும் போது காவல் துறையினர் தனிநபர் மரம் வெட்டுவதற்காக பாதுகாப்பு பணிக்கு இந்தப் பகுதிக்கு வந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும் பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அந்த கோயில் வளாகத்தில் குவிந்தனர்.
மேலும் மரத்தை சுற்றிலும் கை கோர்த்து வேலியடைத்து நின்றனர். தொடர்ந்து பொதுமக்கள் முகாமிட்டு வருகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனி நபருக்குக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



