நாகர்கோவில், மே 26 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முன்வைக்கும் கோரிக்கையினை உடனுக்குடன் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 11280 எக்டேர் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தென்னையில் வெள்ளை பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு நில உடமை அடையாள அட்டைகள் 1,87,554 பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேளாண்மை துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இத்திட்டங்களில் அதிகளவு விவசாயிகள் இணைந்து பயன்பெற துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சின்ன முட்டம், குளச்சல், தேங்காய் பட்டினம், முட்டம் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. தொடர்ந்து 35 இடங்களில் மீன் இறங்குதளங்கள் செயல்பட்டு வருகின்றன. மீனவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் உரிய முறையில் சென்றடைகிறதா என்பது குறித்து துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெறும் பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அதிகளவில் பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலை துறையின் சார்பில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாலப்பணிகள்களையும் விரைந்து முடித்திட வேண்டும். இரயில்வே துறையின் சார்பில் நடைபெற்று வரும் நுள்ளிவிளை பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் போக்குவரத்தினை சீரமைத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியம், விபத்து மரண உதவி தொகை, ஈமச்சடங்கு உதவி தொகை, இயற்கை மரணம் உதவி தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவி தொகை உள்ளிட்டவைகளை வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆதி திராவிட நல துறை, மாவட்ட வேலைவாய்ப்பு துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலை துறை உள்ளிட்ட அனைத்து துறை திட்டங்கள் செயல்படுத்துவதில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று என்னிடம் தெரிவித்தால் அந்தந்த துறை அமைச்சர்களிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக கொண்டு செல்ல அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, மாவட்ட வன அலுவலர் அன்பு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் உயர் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



