திருப்பூர், பிப். 19 –
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம் மற்றும் காங்கேயம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் அந்தந்த காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர்களை உள்ளடக்கிய “வாட்ஸப் குழு” (Anti Drug Committee Whatsapp Group) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் புதிதாக துவங்கப்பட்டு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு குறித்த தகவல்கள் பகிரவும், மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதும் சுமார் 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு மாணவ மாணவிகளிடம் போதைப்பொருள் குறித்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



