கன்னியாகுமரி, மே 21 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று மாலை கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சாரபாக கொடிப்பட்டம் மரபு படி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரி ரட்சகர் தெரு கைலியார் குடும்பத்தை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சி தொடங்கியது. கொடிப்பட்டத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி 3 முறை வலம் வர செய்து, பின்னர் பஞ்ச வாத்தியங்கள் முழங்க மாத்தூர் மணலிக்கரை மட தந்திரி சஜித் சங்கரநாராயணரூ கொடி ஏற்றினார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழா 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
9-ம் திருவிழாவான 29-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 10-ம் திருவிழாவான 30ந் தேதி அதிகாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.



