நாகர்கோவில், மே 20 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் 79 கடலோர குடியிருப்புகள், 19 வழியோர ஊரக குடியிருப்புகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிக்காக 5500 மீட்டர் நீளத்திற்கு 400 மி.மீ விட்டமுள்ள ஒபிவிசி குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட மாங்குழி சாலையில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை 30.05.2026-க்குள் விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறித்தினார்.
தொடர்ந்து கல்குளம் வட்டத்திற்குட்பட்ட திக்கணங்கோடு முதல் திங்கள்சந்தை வரை (பரசேரி – புதுக்கடை சாலை) 4400 நீளத்திற்கு 500 மி.மீ விட்டமுள்ள டிஐ குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் கன்னியாகுமரி – சுசீந்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வழுக்கம்பாறை பகுதியில் நான்கு வழி சாலை அருகே நெடுஞ்சாலைத் துறையால் 150 மி.மீ விட்டமுள்ள டிஐ குழாய்கள் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை 23.05.2026-க்குள் போக்குவரத்திற்கு இடையூரின்றி விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
நடைபெற்ற ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ராஜன், உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜேஷ்குமார், உதவிப் பொறியாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



