கருங்கல், மே 19 –
கருங்கல், கருமாவிளை பகுதியில் ஷரோலின் என்பவர் குத்தகை அடிப்படையில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவருக்கும் அந்த இடத்தை குத்தகைக்கு கொடுத்த உரிமையாளருக்கும் பிரச்சனை உள்ளது. அதாவது பெட்ரோல் பங்கில் இருந்து குத்தகைக்கு கொடுத்த நபரின் வணிக வளாகத்திற்கு சட்ட விரோதமாக மின் இணைப்பு எடுத்ததாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெட்ரோல் பங்க் இருக்கும் இடத்தின் உரிமையாளர் மகன் தாஸ்வின் வேதிஷ் என்பவர் பெட்ரோல் பங்கில் நுழைந்து தண்ணீர் மோட்டாரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இதை பெட்ரோல் பங்க் பெண் மேலாளர் டேரி என்பவர் தட்டிக் கேட்டார்.
இதில் ஏற்பட்ட தகராறில் டேரியை தாஸ்வின் வேதிஷ் மற்றும் மூன்று பேர் கடுமையாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த டேரி மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது சம்பந்தமாக கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டும், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தாக்குதல் நடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



