சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 – வார்டுகள் உள்ளன. இந்த 27 – வார்டுகளிலும் சேகரிக்கப்படும் கழிவுக் குப்பைகளை கொட்டுவதற்கு ஏற்கனவே சிவகங்கையை அடுத்துள்ள சுந்தரநடப்பு என்ற ஊரின் அருகில் இடம் கையகப்படுத்தப்பட்டு அங்கு குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. இந்த குப்பை சேகரிக்கும் மையத்தில் குப்பைகள் கொட்டி தரம் பிரிக்கப்பட்டும் வந்தது
பின்னர் இந்த குப்பைக் கிடங்கு பகுதியில் இருந்து மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறி சுந்தரநடப்பு கண்மாய்க்கு வருவதாகவும் இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாகவும் குறை கூறி அந்த பகுதி மக்கள் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றனர்.
இதனால் நகராட்சி நிர்வாகம் நகரின் குப்பைகளை சிவகங்கை அரசு மருத்துவமனை அருகில் உள்ள மயானத்தில் கொட்டி இயற்கை உரம் தயாரித்து வந்தனர். இந்த இயற்கை உரத்
தொழில் சரியாக நடைபெறவில்லை இதன் பின்னர் நகராட்சி கழிவு குப்பைகளை சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அருகில் கொட்டி வந்தனர். அங்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த இடத்திலும் அளவுக்கு அதிகமான குப்பைகள் கொட்டி விட்டதால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சிபி – காலனி இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள மயானத்தின் அருகில் இடையிடையே குப்பைகளை கொட்டி வந்தனர்.
இந்நிலையில் இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டும் போது சிபி- காலனி பொதுமக்கள் அங்கு வந்து இங்கு குப்பைகளை கொட்டக் கூடாது என தடுத்து நிறுத்தி வேனை சிறைப் பிடித்தனர் .
அதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு பின்பு சிபி- காலனி பொதுமக்கள் நகராட்சி குப்பை வண்டியை விடுவித்தனர் இவ்வாறு சிவகங்கை நகராட்சிப் பகுதியில் கழிவுக் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு சரியான இடம் தேர்வு செய்வதில் பல்வேறு நடைமுறை கஷ்டங்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தனிக் கவனம் செலுத்தி நகராட்சி குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு அரசு சார்பில் தனி இடம் தேர்வு செய்ய வேண்டும் இதில் விரைவான செயல்பாடு வேண்டும் என சிவகங்கை நகர் மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.