மதுரை, ஆகஸ்ட் 19 –
மதுரை அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே காலி ஆம்புலன்ஸை உள்ளே புகுத்தி திமுக சதி? தமிழகத்தில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. தொடர்ந்து முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், தற்போது மூன்றாம் கட்டத்தில் மக்களின் எழுச்சி பயணத்தை கண்டு ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சர்கள் சகாக்களுக்கும் நடுக்கமே வந்துவிட்டது. முதலில் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களை வைத்து விமர்சனம் செய்தார்கள். அது மக்களிடத்தில் எடுபடவில்லை.
அதனைத் தொடர்ந்து திமுக தற்போது ஒரு அரசியல் தரம் தாழ்ந்த திட்டத்தை கையாண்டு எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் எங்கெல்லாம் பேசுகிறாரோ அந்த கூட்டத்தில் காலியான ஆம்புலன்ஸ் வாகனத்தை உள்ளே புகுத்தி கூட்டத்தை திசை திருப்புகிறார்கள்.இதை எடப்பாடியார் சுட்டி காட்டிய போது அமைச்சர் மா.சு.தங்களின் தில்லு முல்லுவை மறைக்க செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடியார் மிரட்டும் தோணியில் பேசி உள்ளார் என்று கூறியுள்ளார். அமைச்சர் மா.சு. திடீரென்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?
தமிழகத்தில் 1,352 ஆம்புலன்ஸ் உள்ளது. ஏறத்தாழ 6,000 க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு 2025-2026 ஆண்டுகளில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 30 சதவீதம் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் இல்லை என்றால் அக்டோபர் மாதம் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இந்த அரசை எச்சரித்து வருகிறார்கள். ஆனால் இதைப் பற்றி இதுவரை அமைச்சர் மா.சு. வாயே திறக்கவில்லை. உண்மையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது அக்கறை இருக்குமானால் இந்நேரம் கோரிக்கை நிறைவேற்றி இருக்க வேண்டாமா?
அது மட்டுமல்ல ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துகிறார். அதேபோல அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்போதெல்லாம் ஆம்புலன்ஸ் அந்தக் கூட்டத்திற்குள் வருவதில்லை. ஆனால் எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் பேசும் போது மட்டும் காலி ஆம்புலன்ஸ் வருகிறது. இது இயற்கையாக நடைபெறுவதாக இல்லை. நான் சிலரிடம் விசாரித்த போது எனக்கு அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. அதில் எடப்பாடியார் பேசுகின்ற கூட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் தேவையை தவறாக பயன்படுத்துவதாகவும் அதே போல தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்துமாறு மிரட்டப்படுவதாக செய்தி வருகிறது.
பொதுவாக காலி ஆம்புலன்ஸ் வரும் பொழுது அதை நிறுத்தி விசாரிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இது கூட தெரியாத அமைச்சராக மா.சு. உள்ளார். அம்மா ஆட்சிக்காலத்தில் 108 ஆம்புலன்ஸ் மக்கள் உயிரை காக்கும் சேவையாக பயன்பட்டது. ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் திமுக அரசு தேர்தல் காலங்களில் பணத்தை பட்டுவாடா செய்யவும் பணத்தை பதுக்குவதற்கும், தற்போது எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை திசை மாற்றம் செய்வதற்குமே பயன்படுத்துகிறது. காலி ஆம்புலன்ஸ் மூலம் அநாகரிக அரசியல் செய்யும் திமுகவை 2026 தேர்தலில் மக்கள் காலி செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று கூறினார்.


