கோவை, மே 16 –
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆண்டுக்கு ஒரு முறை அதன் தரம் குறித்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இக்குழுவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார் தலைமையில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வினித், தனியார் பள்ளி கல்வித்துறை அலுவலர் பரமசிவம், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன், வட்டாட்சியர் கவிதா, தீயணைப்பு நிலைய அதிகாரி அனில்குமார் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 58 தனியார் பள்ளிகளில் இயங்கும் சுமார் 535 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின் மூலம் பள்ளி வாகனங்கள் சரியான முறையில் இயங்குகின்றதா எனவும், உரிய ஆவணங்களுடன் பராமரிக்கப்படுகிறதா எனவும் இக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு குறைபாட்டில் உள்ள வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கி பள்ளி நிர்வாகத்திடம் சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டார்கள்.
மேலும் ஓட்டுநர் மற்றும் அணுகுநர்களுக்கு கண் சிகிச்சை முகாம் மூலம் கண் பரிசோதனை செய்தார்கள். பின் சாலை பாதுகாப்பு தொடர்பாக தீ விபத்து மற்றும் சாலை விபத்தின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என அவர்களுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் மூலம் பயிற்சி அளித்து விளக்க செயல்முறை செய்து காட்டினார்கள்.



