நாகர்கோவில், மே 8 –
கன்னியாகுமரி, சுவாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா. இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மூத்த மகன் ரபின் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் லெமீஸ் என்பவர் ஹைதராபாத்தில் படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி முத்துலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு வடக்கன்குளத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். மறுநாள் 2ம் தேதி திரும்பி வந்த போது வீடு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த ரூ.12 லட்சம், 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இது குறித்து கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜ பெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த விசாரணை நடத்தினர். அந்த பகுதி சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கார் ஒன்று சிக்கியது. கார் எண் பதிவு அடிப்படையில் நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் (27) என்பவர் கொள்ளை அடித்தது தெரிய வந்தது.
தனி படை போலீசார் திருநெல்வேலி சென்று தேடுதல் வேட்டை நடத்தி பொன்ராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 10 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகை, சொகுசு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பொன்ராஜ் வாடகை கார் டிரைவர் ஆவார். மேலும் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இவர் மீது 25 வழக்குகள் உள்ளன.
தனிப்படை போலீசார் கூறுகையில்: சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பொன்ராஜை கண்டுபிடித்ததாகவும், இதில் ஒரு இடத்தில் காரை ஓட்டி சென்ற போது கேமரா பதிவில் பொன்ராஜின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்ததாகவும், அதன் பேரில் விசாரணை நடத்தி கைது செய்ததாகவும் கூறினார்கள். குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்பி ஸ்டாலின் பாராட்டினார்.



