நாகர்கோவில், மே 2 –
நாகர்கோவில் அடுத்த வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி சாந்தா (77). இவர் சம்பவ தினம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில் நடந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக வில்லுக்குறியில் இருந்து பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.
வெட்டூர்ணிமடம் சந்திப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற நிலையில், கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. உடனடியாக தான் நடந்து வந்த சாலையில் தேடிய போது செயின் கிடைக்கவில்லை. பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் செயினை பறித்தது தெரிய வந்தது.
இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் சாந்தா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிக்கப்பட்ட செயின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் என கூறப்படுகிறது. குமரியில் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.


