சென்னை, மே 2 –
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பினோத் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது பேசிய அவர்: கடந்த 2025 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 11.33 % அதிகரித்து ரூ.12,156 கோடியாக உயர்ந்துள்ளது.
மார்ச் காலாண்டில் மட்டும் வங்கி ரூ.3,103 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் சில்லறை வணிகம் 12.79% வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக சில்லறை, வேளாண்மை மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்கள் 15.18% உயர்ந்து, வங்கிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. வங்கியின் வைப்புத்தொகை 12.29% அதிகரித்து ரூ.8.27 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகைகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்து 39.67% என்ற ஆரோக்கியமான விகிதத்தை எட்டியுள்ளது.
வங்கியின் செயல்பாட்டு லாபம் ரூ.15,286 கோடியாக உயர்ந்துள்ள அதே வேளையில் வங்கியின் செலவினங்களை குறைப்பதிலும் நிர்வாகம் வெற்றி கண்டுள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி முன்னுரிமைத் துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய 40% கடனுதவி இலக்கைத் தாண்டி, இந்தியன் வங்கி 41.46 % வரை கடனுதவி வழங்கி முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் வலுவான மற்றும் வளர்ந்து வரும் தொகுப்பு இருப்பதால் இது முதலீட்டிற்கு ஒரு கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. மாநிலத்தில் எங்களுக்கென ஆழமாக வேரூன்றியிருக்கும் இருப்பைப் பயன்படுத்தி இந்தச் சூழலமைப்பை மேலும் வலுப்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் தமிழ்நாட்டிற்குள் வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் அதிகப்படுத்துவதற்காக எங்கள் வளங்களைச் செலுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.



