ராமநாதபுரம், ஏப். 29 –
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா நாயகத்தின் 852 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்ற விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்று விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி அளவில் ஏர்வாடி முஜாஹிர் நல்ல இபுராகிம் மஹாலிலிருந்து நாட்டியக் குதிரைகள் நடமாட, வான வேடிக்கை வானில் வர்ண ஜலாம் காட்ட, பெண்கள் குலவையிட்டும், வாலிபர்கள் ஒயிலாட்டத்துடன் பச்சை வண்ண பிறை கொடி
யானை மீது வைத்து ஊர்வலமாக தர்ஹா வளாகத்தை வந்தடைந்தது.
2 கி மீ தூர கொடி ஊர்வலம் தர்ஹா வந்தடைந்ததும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் மார்க்க அறிஞர்கள், ஆலிம்கள், உலமாக்கள், ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அஹமது இபுராஹிம், துணைத்தலைவர் முஹமது சுல்தான், செயலர் ஜாகிர் ஹுசைன், தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் முன்னிலையில் உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு இரவு 6:58 மணியளவில் கொடியேற்றம் நடந்தது.
இதைத் தொடர்ந்து மே 10 மாலை தொடங்கும் சந்தனக்கூடு திருவிழா மே 11 அதிகாலை தர்ஹா வந்தடைந்ததும் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தன பூசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே 18 மாலை கொடியிறக்கப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.



