மார்த்தாண்டம், ஏப். 28 –
மார்த்தாண்ட பகுதியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் (35). கொத்தனாராக வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவருக்கும் அதே பகுதி சேர்ந்த அபிதா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அபிதாவின் பெற்றோர் 25 பவுன் நகை, ஜெயகணேஷ் உறவினர்களுக்கு 9 பவுன் நகை, 2 லட்சம் பணம், வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
பின்னர் மீண்டும் ஜெயகணேஷ் மனைவி அபிதாவிடம் ரூ. 10 லட்சம் வேண்டுமென கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதை அடுத்து அபிதாவின் வீட்டில் கேட்டு ரூ.8.50 லட்சம் பணத்தை வாங்கிக் கொடுத்துள்ளார். இதில் ஜெய்கணேஷ் கார் மற்றும் பைக்குகள் வாங்கியுள்ளார்.
ஜெய்கணேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அபிதாவிடமிருந்து 18 பவுன் நகைகளை ஜெய்கணேஷின் சித்தி கிருஷ்ணம்மாள் கேட்டு வாங்கியுள்ளார்.
மேலும் இருப்பில் உள்ள நகைகளை ஜெய் கணேஷிடம் சொல்லி அபிதாவிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அபிதா கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணம்மாள், ஜெய்கணேசின் தந்தை ஜெபமணி (68), ஜெனிஷ் ( 27), ஜெனிபா ( 38) ஆகிய 4 பேரும் சேர்ந்து அபிதாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அபிதா குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து மார்த்தாண்ட மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜெயகணேஷ் , கிருஷ்ணம்மாள், ஜெபமணி, ஜெனிஸ், ஜெனிபா ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


